மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சிந்தியா ராஜினாமாவை தொடர்ந்து, 20 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கியதால் அரசியல் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், கமல்நாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்களை நேற்று மாலை முதல் தொடர்பு கொள்ள முடியாததால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சியை தாக்க வைப்பதற்காக முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் 16 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்காக அமைச்சர்கள் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் மோடியை, அவரின் இல்லத்தில் ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இதற்கிடையே, 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.